Sunday, January 23, 2022

கருத்து

ஒரு கருத்தின் உள் நின்று, அதில் இருக்கும் வழுக்களையும் அகருத்தின் வேரையும் கண்டறிவதென்பது, தலைகீழாக நின்றாலும் இயலாத ஒன்றாகும்..  அவைகளை செய்யவேண்டுமாயின், அக்கருத்தை விட்டு வெளியே வந்து அதற்கு சற்று அடிப்படை நிலையில் நின்று அதனை ஆராய முற்படவேண்டும்.. காட்டாக..

ஒரு உயிரியலாளரால் முதலுயிர் தொற்றத்தைப்பற்றியோ நோய்கள்பற்றியோ உயிரியல்வழியாக ஆழ்ந்த பதில் கூறிடமுடியாது.. அதற்கு அவர் வேதியியலுக்கு வந்தே ஆகவேண்டும்... அதுபோல, ஒரு வேதியியலாளருக்கு நீரியவளியும் உயிர்வளியும் இணைந்து! எவ்வாறு நீராகிறது என்று கூறிட, அவர் இயற்பியல் கூறுகளுக்கு வந்தே ஆகவேண்டும்... ஒரு எதிர்மின்னியைப்பறியான அறிதல்களுக்கு, எவரும் எதிர்பாராத, நிகழ்தகவு என்னும் கணக்கின் கூறுக்கு வந்தே ஆகவேண்டும்...  கண்டிப்பாக நிகழ்தகவுக்கு அடிப்படை நிலை "நம்பிக்கை" அல்ல.. "இன்றுவரை" "கண்டுபிடிக்கப்படவில்லை".. அவ்வளவே..

விடை அறிய/அளிக்க முடியாத கேள்விக்குழிகளை நிரப்புவதற்காக, மாந்தர்கள் உருவாக்கிய கடவுள்கள் மூன்று வகை:
1) வான்(உலகக்) கடவுள்கள்
2) ஞாலத்தின்மேல் குடிகொண்டுள்ள கடவுள்கள்
3) உள்ளிருக்கும்/உள்ளமே கடவுள்

எக்காலத்திலும், மாந்தர்கள் தங்கள் அறிவியல் வளத்தில் சிலபல எடுகோள்களை வைத்துக்கொண்டே அடுத்த நிலையை நோக்கிச் செல்வர்.  அவ்வாறான எடுகோள்களில் பல, ஞாலப்பருவத்திற்கேற்ப ஐயத்திற்கும் ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டு அவைகளை நிறுவவேண்டுமா தொடரவேண்டுமா களையவேண்டுமா என அறிஞர்களால் முடிவுசெய்யப்படும்.  இது அறிவியல் தொடர் தேடலின் நிலைப்பாடு.  

ஆனால், சில எடுகோள்களாக கருதப்பட்டவைகளோ, ஐயத்திற்கு உட்படுத்தப்படாது உறுதியாக இறுதியாக மாந்தர்களால் நம்பப்பட்டுவிடுகின்றன.  இதனவை உறைந்துபோய்  சமயங்களாகவும் கடவுள்களாகவும்  பேதைமைகளாகவும் குருட்டு நம்பிக்கைகளாகவும் ஆகிவிடுகின்றன.  ஆக, ஒவ்வொரு நம்பிக்கை சார்ந்த படைப்புகளை கூர்ந்து கவனித்தோமென்றால் அதில் நன்னெறிகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த கூறுகள் இருப்பதுபோல, அறிவியல் சார்ந்த சிலபல எடுகோள்களும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும்.  இது இயல்பான ஒன்றே.  இறைவனைப் பற்றியான படைப்புகளில், இறைவனின் படைப்புகளாக சமயங்களால் கருதப்படும், அக்காலத்தில் உண்மை என எடுத்துக்கொள்ளப்பட்ட அறிவியல் எடுகோள்களையும் குறிப்பிடுவது இயல்பே.  ஆனால் அவ்வகையான எடுகோள்களில் சில அதன்பின்னர் ஏற்பட்ட சில அறிவியல் முன்னேற்றத்தினால் காலாவதியாகிப்போயிருக்க வாய்ப்புண்டு.  மாந்தர்களிடையே புழங்கும் பல நம்பிக்கை சார்ந்த படைப்புகளிலுள்ள அறிவியல் எனக்கருதப்படும் எடுகோள்களானவை காலாவதியாகிப்போய் சில நூற்றாண்டுகளே ஆகிவிட்டன.

பெரும்பாலான நம்பும்படியன  பொய்களானவை ஆங்காங்கு உண்மைகள் தோய்க்கப்பட்டே உருவாக்கப்படுகின்றன..  அதுபோல, "உண்மை"கள் என நாம் கருதிவிடும் பெரும்பாலானவைகளுள்ளும் சிறிது கற்பனையும் பொய்யும் தெரிந்தொ தெரியாமலோ கலக்கப்படுகின்றன.  ஒருவர் நம்பிக்கோண்டிருப்பவைகளுள் பொய்கள் உள்ளன என்பதை அவருக்கு புரியவைப்பதைவிட எளிதாக அவரை ஒரு பொய்யை நம்பவைத்துவிடலாம்.  வேடிக்கையாக இப்படிக்கூறுவர்: "ஆயிரம்பேர் ஒரு திங்களுக்கு ஒரு பொய்யை  நம்பினால் அது போலிச்செய்தி (பேக் நியூசு)..  ஆனால் ஒரு பொய்யை கோடானகோடிபேர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நம்பினால் அதன் பெயர் சமயம்"..  அது வேடிக்கையானதாகவே இருந்துவிட்டுப்போகட்டும்.. அதன்பாலுள்ள சொற்போருக்கு நான் வரவில்லை..  பெரும்பாலான பொய்கள் சுவையானவை அல்லது நகைச்சுவையானவை. அவை சுவைக்கத்தக்கவை,  வெறுக்கவேண்டியதில்லை..  இன்னும் சொல்லப்போனால், பல பொய்களை ஆராய்ந்தால் அதனுள், வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ புகுத்தப்பட்டிருப்பதை அறியலாம். ஆராயுங்கள்.  தொடர் தேடுதலில் இருங்கள். எந்த ஒரு பதிலுக்கும், முதலில் உங்களுக்குள் உங்கள் அறிவெல்லைக்கெட்டிய கேள்வியிகளை எழுப்புங்கள், எட்டவில்லையெனில் அக்கேள்விகளை புறத்தே எழுப்புங்கள். இக்கேள்விகள் தான் உங்கள் மூளை நரம்புகளில் நீங்கள்  சேர்த்துவைக்கப்போகும் உண்மைகள் என நீங்கள் நம்பிக்கொண்டிருப்பவைகளிலுள்ள பொய்களின் விழுக்காட்டடை முடிவுசெய்யும்.  உண்மை என்பது பலநேரம் தெளிவற்றதாக ஓர்மைத்தன்மையற்றதாய் பன்மைத்தன்மையுடன் உங்கள் தேடலின்போது உங்களுககு கிட்டும்.  பரவாயில்லை, அதனை அப்போதைக்கு அப்படியே ஏற்றுக்கொண்டு தேடலைத் தொடருங்கள்.  கேள்விக்கான விடை இதுவரை கிட்டவில்லை என்பதாலும் விடை கிட்டுவதற்கான எதிர்காலம் கானல் நீராகவே படுகின்றதாலும், கடவுள் சொன்னார் சாமியார் சொன்னார் விண் ஒலி சொல்லிற்று கனவு சொல்லிற்று என எவனோ சொல்லிவைத்த எழுதிவைத்த தற்காலிக ஓட்டையடைப்புக் கற்பனைக் கட்டுக்கதைகளை நம்பவேண்டியதில்லை. எவரோ ஒருவர் தட்டிவிடும் கற்பனைக் கட்டுக்கதைக் கண்மூடித்தனமாக நம்பிவிடுவதற்காகவா இஞ்ஞாலத்தில் பிறந்திருக்கிறோம் என்பதை என்றும் எண்ணிக்கொள்ளுங்கள்.

"பகுத்தறிவால் ஆராயப்படாத நம்பிக்கைகளைக் கொண்ட மாந்தர்கள், முறைபடுத்தப்பட்ட கல்வியறிவு பெற்றால் அந்நம்பிக்கைகளினின்று விடுபட்டு தெளிவுற்று அறிவுத்தேடலை நொக்கிச் செல்வர்" என்று வெகுகாலம் கருதிவந்தனர்..  ஆனால், அதில் மீச்சிறிய விழுக்காடே ஈடேறுகிறது என்பது கீழ்க்காணும் தகவலிலிருந்து தெளிவாகிறது..  பெரும்பாலான முறைபடுத்தப்பட்ட கல்வியறிவூட்டு முறைகள், ஒருவரை நடுநிலையை நோக்கித் தள்ளவே முயற்சிக்கிறது..  பெரும்பாலான கல்விக்கூடங்கள் கல்வியறிவினூடே சிலபல நம்பிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தக்கவைக்கிறது அ| விதைக்கவே செய்கிறது... ஆக, இவ்வகையாகவே பெரும்பாலாகக் கிடைக்கப்பெறும் கல்வியைக்கொண்டு, மாந்தர்கள்,  தத்தங்கள் நம்பிக்கைகளை அறிவியல்ரீதியாக புதுப்பிக்கவும் நியாயப்படுத்தவும்,  அந்தந்த காலத்தின் அறிவியல் முன்னேற்றத்தின் கனிகளைக்கொண்டு அந்நம்பிக்கைகளுக்கு புத்துயிரும் புதுநிறமும்  பெருச்செலவிட்டு அளிக்க முற்படுகின்றனர் என்பது கண்கூடு....





No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...