Tuesday, October 24, 2023

செந்தார்மிழி

செந்தார்மிழி


என்ன ஒரு அருமையான இசையமைப்பு.  திரு செயச்சந்திரன் உண்மையிலேயே மிகச் சிறப்பான செயலைச் செய்திருக்கிறார். பாடலின் மெட்டமைப்பாகட்டும், பின்னணி இசைக் கருவிகளின் ஒருங்கமைவு ஆகட்டும், சொர்கத்தின் இன்பத்தையே நம் கண்முன் காட்டியிருக்கிறார் திரு செயச்சந்திரன் அவர்கள். முதல் இடை இசையில் வரும் ஒத்திசைகளாயானது மெய்மறக்கச்செய்கிறது. "நீராம்பல் தேடி..." என்பதிலும் "அந்நக்ரகார ராத்ரியில்.."  என்பதிலும் வரும் வயலின் குழுவின் பின்னணி இசையைக் கேளுங்கள்.  ஆகா!, நம் உள்ளத்துக்குள் சிறகுகள் படபடக்கின்றன.

பின்னூட்டங்களைப் பார்த்தால்,  மலையாளிகளுக்கு இசை அமைத்தவர்களையும் வரிகள் எழுதியவர்களையும் விட பாடியவர்களையும் நடித்தவர்களையும் மட்டுமே புகழப் பிடித்திருக்கிறது.

மலையாளத் திரையிசைப் பாடல்களிலேயே,  சங்கதத்தை வேண்டுமென்றே மிகையாக சேர்க்கப்படாத சில பாடல்களில் இது ஒன்று எனலாம். மாறாக நிறைய அழகான தமிழ் சொற்களை கேட்கமுடிதிறது. இப்படிப்பட்ட பாட்டை வரைந்ததற்கு கவிஞர் திரு கைதப்புறமுக்கு வாழ்த்துகள்.

வாழ்க்கை

 வாழ்க்கை

அடிப்படையற்ற வாழ்க்கையடா - இதில்
அடிக்கடி கவலை ஏதுக்கடா..
அழுகையும் புலம்பலும் பொருளற்றது - உள
அமைதி மட்டுமே நிறைவுதரும்

இடரென்பது குறுவரலாறு - நுகர்
இனிமை நொடியில் மறைபாடு..
இம்மையின்பின் உனை நினைப்பது யார் - இந்த
இயற்கைக்கு நீ வெறும் இமைப் பொழுது..

உறக்கக் கனவுகள் கானல் நீர் - நம்
உய்யக் கனவொரு கோதிக்கும் நீர்...
உளமுறிவும் பெறும் இன்சுவையும் - அது
உருகிடும் நேரமே வாழ்கையடா...

எத்தனை நம்முள் எண்ணங்கள் - அதில்
ஏக்கமும் நோக்கமும் பெரும்பகுதி..
எமன் வரவை நீ நினையாதே - உயிர் 
எல்லையில்லை என முடித்துவிடு..

ஒரு ஞாலம் அதில் ஒரு யாக்கை - பின்
ஒற்றை உயிர் மறு உடல் பெறுமோ..
இன்னுலகோ இல்லை தீயுலகோ - இதை
ஒருவரு மறியார் மகிழ்விலிரு..

அடுக்கு

 அடுக்கு

கூட்டல்/addition: க + 3

பெருக்கல்/multiplication: க × 3 =  க + க + க

அடுக்கேற்றம்/exponentiation: க³ = க ^ 3 = க × க × க 

ஆடுக்கேற்றம்?/tetration: ³க = க ^² 3 = க ^^ 3 = க ^ க ^ க

இடுக்கேற்றம்?/pentration: க ^³ 3 = க ^^^ 3 = க ^^ க ^^ க)

ஈடுக்கேற்றம்?/hexation: க ^⁴ 3  = க ^^^^ 3 = க ^^^ க ^^^ க

உடுக்கேற்றம்?/heptation: க ^^^^^ 3 = க ^^^^ க ^^^^ க

ஊடுக்கேற்றம்?/octation: க ^^^^^^ 3 = க ^^^^^ க ^^^^^ க

அடுக்கேற்றத்துக்கு மேலுள்ளவைகள் மீப்பெரும் எண்களைக் குறிப்பவை என்பதால், அவைகளை இதுவரை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்துவது கிடையாது.  

பெருந்தரவு (bigdata) மற்றும் மீநுண் பொறிகளின் (nanobot) பயன்பாடு மிகையாகிடும்போது  இவ்வகையான அடுக்குகளும் அதற்கேற்ற கணக்குகளும் தேவைப்பட வாய்ப்பிருக்கிறது.


Saturday, October 21, 2023

புழு

 புழு

அசோக்நகர் (உயர்தர) சரவண பவனில் சிலபல ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பகல் நேர உணவில், சாம்பாரில் மிதந்த காய்கறித் துண்டுகளிடையே சுண்டுவிரல் நீளத்துக்கு ஒரு புழு.  விடுதி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.  வாயிலில் வேறு ஒரு 20-30 பேர் பெயரைக் கொடுத்துவிட்டு காத்திருந்தார்கள்.  நான் கூட முதலில் அதனை கொத்வரங்காய் எனத் தான் நினைத்தேன்.  பார்க்கவும் அப்படித்தான் இருந்தது.  ஒரு குருட்டு ஐயத்தில் அதனை எடுத்து அருகில் பார்த்தபோது கொத்தவரங்காய்க்கு கண்ணு மூக்கெல்லாம் இருக்கு. ஆகா..

மெல்ல எழுந்து உணவக மேற்பார்வேயாளரை கை உயர்த்தி அழைத்தேன். சுற்றியிருந்தவர்கள் பசியிலும் உணவின் சூட்டிலும் சுவையிலும் தங்களை மறந்து உணவருந்திக்கொண்டிருந்தனர்.  அவர் அருகில் வந்ததும் எதுவும் பேசாமல் கண்ணசைவில் என் விரலின் அருகே காண்பித்தேன்.  அதை கவனித்த அவர் என் காதருகே வந்து "இந்த தட்டை அப்படியே நான் எடுத்துக்கொண்டுபோய், வேறு புதிய உணவுத் தட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்றார்.  அதற்கு நான் "இல்லை, புதிய தட்டு கொண்டுவரவேண்டாம். நான் கிளம்புகிறேன்" என அவர் காதருகே கூறிவிட்டு, வெளியேறினேன்.  கூடவே வந்த அவர், இதை பொறுத்தருளக் கூறிவிட்டு உணவுக்காக நான் ஏற்கனவே செலுத்தியிருந்த பணத்தையும் காசாளரிடமிருந்து பெற்றுத்தந்தார்.

மள்றொரு முறை திருப்பதியில் எனது அத்தை மகனோடு  போயிருந்தபோது, ஒரு மாலை வேளை, அங்குள்ள ஒரு உணவுவிடுதியில் கொடுக்கப்பட்ட தோசைக்கான சட்னி கடுமையாக ஊசிப்போயிருந்தது.  சட்டென சூடான அத்தை மகன் அங்கிருந்த சேவகரை திட்டலானான்.  அவனை நான் ஆற்ற முயன்றாலும், அவன் கேட்பதாக இல்லை.  "உன் மேற்பார்வையாளரைக் கூப்பிடு, மேளாளரைக் கூபாபிடு" என மிகையாக சூடாகிக் கத்திக்கொண்டிருந்தான். எனகும் வேறு வழி தெரியவில்லை.  நானும் எழுந்து என் அத்தை மகனுக்குத் துணையாகப் பேசலானேன்.  சபாரி உடை அணிந்த இருவர் வந்து எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்னி கிண்ணத்தை முகர்ந்துபார்த்துவிட்டு  "சட்னி கெட்டெல்லாம் பொகவில்லையே, நன்றாகத்தானே இருக்கிறது" என்று சற்று கராராகவே கூறிவிட்டனர்.  அப்போதுதான் அதை கவனித்தேன்.  சுற்றியிருந்த அனைவரும் இதே சட்னகயைத் தான் சுவைத்துச் சுவைத்து இட்லியோ தோசையோ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.  எனக்கே ஐயம் வந்து மீண்டுமொரு முறை அந்த சட்னியை முகர்ந்து பார்த்தேன்.  உண்மையில் அது கெட்டே தான் போயிருந்தது.  "நீங்கள் அப்பட்ட பொய் சொல்கிறீர்கள்.  இது கெட்டுதான் பொயிருக்கிறது" என்னதற்கு "உங்களுக்காக புதிய சட்னி எல்லாம் அரைக்கமுடியாது. உங்களுக்கு வேண்டுமென்றால் இதைச் சாப்பிடுங்கள், இல்லையென்றால் எவருக்கும் மேலும் தொந்தரவு கொடுக்காமல்,- இடத்தைக் காலிபண்ணுகள்" என்று சற்று உரக்கவே கூறிவிட்டு நகர்ந்தனர்.  நாங்களும் கடுப்பில் வெளியேறினோம்.  அங்கிருந்தவர் அனைவரும் எங்களை நக்சல்களைப் பார்பதாக எனக்குத் தோன்றிற்று.

உணவு விடுதியாளர்கள் நமைப்போல ஆயிரம் ஆயிரம் பேரை நாள்தோறும் பார்க்கிறார்கள்.

Saturday, October 7, 2023

நிம்பூ!!

 நிம்பூ!!

இடம்: நாகர்கோவில்
ஆண்டு: 2023

"நிம்பூ.. நிம்பூ..." இந்த ஓசை தான் என்னை எழுப்பியது.  'எவன்டா அது காலங்காத்தால தலமாட்ல வந்து கத்துறது..' என்று அரைத் தூக்கத்தில் சலித்துக்கொண்டே தலையணை அருகே  தலைகுப்புறக் கிடந்த திறன்பேசியை உரசி உயிர்ப்பித்தபோது காலை 10:26 என்று கொட்டை எழுத்தில் காண்பித்தது.  

நேற்றிரவு விழித்திருந்து செய்த பணி மற்றும் இன்னும் மிச்சமிருக்கும் சிலபல அலுவலகக் கடமைகள் சட்டென நினைவுக்கு வர முக்கால் விழிப்பில் இருந்த என்னிடம், 'எழுந்தே ஆகவேண்டும்' என வலப்புற மூளை சொல்லிக்கொண்டிருக்கும்போதே 'வாட்சாப்' என கட்டைவிரலுக்கு கட்டளையிட்டது இடப்பக்க மூளை.  

ஞெலுவர் மற்றும் கேளிர் குழுக்களிலிருந்த "காலை வணக்கம்" பகிர்வுகளை மேல்புறமாக  உருட்டிக்கொண்டிருக்கும்போது, மீண்டும் "நிம்பூ.. நிம்பூ... ஏக் கிலோ பச்சாசு உரூபையா" என்ற அந்த உரத்த குரல் கேட்டது.  திடுக்கிட்டுக் குழம்பிய நான் போர்வைகளை உதறி எழுந்து  வாசற்கதவை திறக்கும்போதே, அதே குரல் "எலுமிச்சம்பழம்.. எலுமிச்சம்பழம்.. கிலோ அம்பது உரூவா" எனக் கத்தியது!! வெளியில் வந்தால், நம் ஊர்க்கார சாயலில் இருந்த ஒருவர் எம்80 ஈருருளியில் எலுமிச்சம்பழம் விற்றுக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.  நடுமுடுக்கு, தாண்டிச்சேன்ற அவர் மீண்டும் "நிம்பூ.. நிம்பூ..." என உரக்கக் கூவிச்சென்றார்...


பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...