Monday, December 25, 2023

ஐந்தாம் தமிழ்

ஐந்தாம் தமிழ்

"நான் ஏன் தமிழ் பயிலவேண்டும்?" என வினவும் மக்கள் ஒருபொழுதும் "நான் ஏன் பிரஞ்சு மொழி பயிலவேண்டும்?", "நான் ஏன் சப்பானிய மொழி பழகவேண்டும்?", "நான் ஏன் சீன மொழி பயிலவேண்டும்?"  என வினவுவதில்லை.  அதுக்குக் காரணம் இம்மொழிகள் பயின்றால் என்னென்ன வருமானம் சார்ந்த பயன்கள் உள்ளன, என இவ்வணிகமயமான உலகம் அவர்களுக்கு தெளிவாக விளக்கிவிடும்.  இணையத்திடமும் இயூட்டியூபிடமும் கேட்டாலே புள்ளிவிவரத்தோடே சொல்லிவிடும்.

ஆனால் "தமிழ் பயின்றால் என்ன வகையான பொருளாதாரப் பயன் இருக்கிறது?" என யாரும் எதுவும் சொல்லித்தரப்போவதில்லை.  ஏனென்றால், அவ்வாறான ஒன்றை நம் முன்னோர்களும் அரசியலாளர்களும் உருவாக்கத் தவறிவிட்டனர்.  தமிழ் மட்டுமல்ல, இவ்வுலகில் இன்றைய 90% மொழிகளுக்கும் வணிகப்பயன் இல்லை.  ஆனால், வணிகப்பயன் இல்லாத மொழியானது, இன்னும் அரை நூற்றாண்டுகூடத் தாக்குப்பிடிக்காது என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று.   எனவே, நம் தாய்மொழியாம் தமிழுக்கென்று ஒரு வணிக/வர்த்தக/பொருளாதாத் "தமிழ்" ஒன்றை உருவாக்குவதே தமிழர்களாகிய நமக்கு முதன்மையான பொறுப்பாக இருந்திடல் வேண்டும்.

சங்ககாலந் தொட்டு, நம்மொழி முத்தமிழ் மொழி (இயல், இசை, நாடகம்/கூத்து) என அழைக்கப்படுகிறது.  இம்முதமிழுக்காகவும் ஏகப்பட்ட தமிழர்கள் காலங்காலமாக தங்கள் உழைப்பைக் கொட்டிய வண்ணம் உள்ளனர், என்பது நமக்குத் தெரிந்த ஒன்றே.  நான்காம் தமிழாக அறிவியலானது இந்நூற்றாண்டில் சேர்க்கப்பட்டது.  அறிவியற்றமிழுக்காக சில தமிழ்பற்றுள்ள தன்னார்வலர்கள் பல ஆண்டுகளாக தங்காளால் இயன்ற அளவுக்கு தொண்டுபுரிந்து வருகின்றனர்.  ஆனாலும் அவ்வாறானவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவே.  அறிவியற்றமிழின் மேம்பாட்டிற்காக அரசாங்கங்களின் பங்களிப்பும் மிகமிகக்குறைவே.  இதில் பெருவாரியான அறிஞர்களும் அறிவியலாளர்களும் அரசாங்களும் அரசியல்வாதிகளும் ஈடுபடாததற்குக்காரணமே, தமிழுக்கென்று இல்லாமல் போன ஒரு வணிக/வர்த்தக/பொருளாதார/வருமானம்சார்ந்த கோணமே.

ஆதலால் தான் இவ்வணிக-வர்த்தக-பொருளாதாரத்தை ஐந்தாம் தமிழாகச்சேர்த்துக்கொண்டு, அதன் பொருட்டு தமிழை கொண்டுசென்றால், தமிழைப்பயில எல்லாரும் விரும்புவர், தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்ல அனைவரும் விழைவர்.  

ஐந்தாம் தமிழ்க் கூறாக பல துறைகள் ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை அறிவேன்.  என்றாலும்,  வணிக-வர்த்தக-பொருளாதாரமானது ஐந்தாம் தமிழ்க்கூறாக இருப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.

"வணிக-வர்த்தக-பொருளாதாரத்" தமிழ் என்பதற்கு ஒரு "சிறு" பெயரை யாராவது பரிந்துரைசெய்தால் பயனுள்ளதாக இருக்கும்.  வணிக-வர்த்தக-பொருளாதாரத் தமிழானது, தமிழை வைத்து வணிகம் செய்வதல்ல, மாறாக தமிழுக்கு வணிக-வர்த்தக-பொருளாதாரத் தன்மையை/மதிப்பை/உயர்வை அளிப்பது என்பது என் சிறு அறிவிற்க்கெட்டிய ஒன்று.  இவ்வாறான ஒரு முயற்சிக்கு வணிக/வர்த்தக/பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை வழங்கிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.   

Sunday, December 24, 2023

நிகண்டு

நிகண்டு

'நிகண்டு' என்ற சொல்லை சில இடங்களில் கேட்டிருப்போம்.  நிகண்டும் அகராதியும் ஒன்றா? இன்று நாம் பயன்படுத்தும் அகராதிகளானவை தமிழ் சொற்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்தும் திசைச் சொற்களுக்கும் சுருக்கமாக ஒரு பொருளையும் மாற்றுச் சொற்களையும் தந்திடும் வண்ணமாக அமைந்திருக்கிறது.  ஆனால் நிகண்டுகள் இதிலிருந்து சற்றே வேறுபட்டு, ஒவ்வொரு சொற்களுக்குமான பொருளையோ மாற்றுச் சொற்களின் தொகுப்பையோ ஒரு செய்யுள் வடிவில் அளித்திடும் வண்ணத்தில் அமைந்திருக்கிறது.  இதில் பலநேரம் தமிழ் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக சங்கதச் சொற்களையும் சங்கதச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக தமிழ்ச் சொற்களையும் அளித்திருப்பர்.  இச்சொற்களின் பட்டியல்கள் பெரும்பான்மையாக கடவுளர் பெயர்கள், மாந்தர் பெயர்கள், விலங்கினப் பெயர்கள், மரப்பெயர்கள், இடப்பெயர்கள் பல்பொருட் பெயர்கள், செயற்கைவடிவப் பெயர்கள், பண்புப் பெயர்கள், செயற் பெயர்கள், ஒலிப்பெயர்கள், ஒருசொல் பல்பொருள் பெயர்கள் ஆகிய தொகுதிகளைக் கொண்டதாக அமைகின்றன.    தொல்காப்பியத்தில் சிலபல சொற்களுக்கு விக்கம் கூறப்பட்டுள்ளன. இவைகள் உரிச்சொல் பனுவல் என அழைக்கப்படுகின்றன.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களுக்கு விளக்கம் அளித்த முதல் ஏடாகத் திகழ்வது திவாகர நிகண்டு.  தமிழில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நிகண்டுவகை நூல்கள்  அறியப்பட்டு அச்சிலும் ஏறியுள்ளன.  அவற்றுள் சில இங்கே:
01} திவாகரம் - 6ம் நூஆ - சேந்தன் திவாகரர் - 12 தொகுதிகள் - 112518 நூற்பாக்கள் - 9500 சொற்கள்
02} பிங்கலம்/பிங்கலந்தை - 9ம் நூஆ - பிங்கலர் - 4121 நூற்பாக்கள் - 14700 சொற்கள்
03} உரிச்சொல் நிகண்டு - 11/17ம் நூஆ - காங்கேயர் - 12 தொகுதிகள் - 285 வெண்பாக்கள் - 3200 சொற்கள்
04} கயதரம்/கெயாதரம் - 15ம் நூஆ - கெயதாரர் - 566 கலித்துறை செய்யுள்கள் - 11350 சொற்கள்
05} அகராதி - 1594 - இரேவணசித்தர் - 1301 நூற்பாக்கள் - அகர வரிசையில் இயற்றப்பட்ட முதல் நிகண்டு இதுவே
06} சூடாமணி - 10/16ம் நூஆ - வீரை மண்டலப் புருடர் - 12 தொகுதிகள் - 1187 விருத்தப்பாக்கள் - 1575 சொற்கள்
07} சூத்திரவகராதி - 1594 - புலியூர் சிதம்பர ரேவண சித்தர் - 3334 நூற்பாக்கள்
08} கைலாசம்/சூளாமணி - 16ம் நூஆ - கைலாசம் - 506 நூற்பாக்கள் - 15000 சொற்கள்
09} ஆசிரியம் - 17ம் நூஆ - ஆண்டிப் புலவர் - 11 தொகுதிகள் - 199 ஆசிரியவிருத்தச் செய்யுள்கள் - 12000 சொற்கள்
10} வடமலை/பல்பொருட்சூடாமணி - 17ம் நூஆ - ஈசுவர பாரதி - 1452 நூற்பாக்கள் - அமரகோசம் எனும் சங்கத நூலை பின்பற்றி இயற்றப்பட்டது
11} தமிழ்-போர்த்துகேய அகராதி - 17ம் நூஆ - ஆந்தரிக் அடிகளார் - ? - இந்த ஏடு இதுவரை கிடைக்கவில்லை
12} சதுரகராதி - 1732 - வீரமாமுனிவர் - 12000 சொற்கள்
13} அரும்பொருள் விளக்கம் - 1763 - அருமருந்தேய தேசிகர் - 740 விருத்தப்பாக்கள் - 3200 சொற்கள் 
14} பொதிகை - 18ம் நூஆ - சாமிநாதக் கவிராயர் - 496 விருத்தப்பாக்களும் 2228 நூற்பாக்களும் மொத்தம் 2326 செய்யுள்கள் - 14500 சொற்கள் - இது எதுகை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது
15} பாரதிதீபம் - 18ம் நூஆ - பரமானந்தத் திருவேங்கட பாரதியார் - 665 கலித்துறை செய்யுள்கள்
16} உசிதசூடாமணி - 1894 - சிதம்பரக் கவிராயர் - 184 ஆசிரிய விருத்தப்பாக்கள்
17} நாமதீபம் - 19ம் நூஆ - சிவசுப்பிரமணியக் கவிராயர் - 808 வெண்பாக்கள் - 1200 சொற்கள்
18} பொருட்டொகை - 19ம் நூஆ - சுப்பிரமணிய பாரதி  - 1000 நூற்பாக்கள் - 1000 சொற்கள்
19} நாநார்த்த தீபிகை - 1850 - முத்துசாமிக் கவிராயர் - 1102 விருத்தப்பாக்கள் - 5432 சொற்கள் -  நிறைய சங்கதச் சொற்களுக்கு பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
20} கந்தசுவாமியம் - 1844 - _சுப்பிரமணிய தேசிகர்_ - 2743 நூற்பாக்கள்
21} விரிவு - 1860 - அருணாச்சல நாவலர் - 1036 விருத்தப்பாக்கள்
22} சித்தாமணி - 1874 - யாழ் வைத்தியலிங்கம் - 400 விருத்தப்பாக்கள் 
23} அபிதான மணிமாலை - 1878 - திருவம்பலத்து இன்னமுதம் கோபாலசாமி - 2425 நூற்பாக்கள்
24} வேதகிரியர் சூடாமணி - 19ம் நூஆ - வேதகிரி - 11 தொகுதிகள் - 583 விருத்தப்பாக்கள்
25} நவமணிக்காரிகை - 19ம் நூஆ - அரசஞ் சண்முகனார் - ? - ?
26} தமிழுரிச்சொற் பனுவல் - 19ம் நூஆ - கவிராச இராம சுப்பிரமணிய நாவலர் - ? - ?
27} நீரரர் - 1984 - ஈழத்துப் பூராடனார் செலவராசகோபால் - 80 செய்யுள்கள்
28} மஞ்சிகன் ஐந்திண - ? மஞ்சிகன் - 122 நூற்பாக்கள்.- 122 சொற்கள் (மரஞ்செடிகொடிப் பெயர்கள்)
29} போகர் அட்டவணை - ? - போகர் - 116 சொற்கள்

மற்ற நிகண்டுகளான பொதியநிகண்டு, ஔவைநிகண்டு போன்றவற்றின் குறிப்புகள் மட்டும்தான் கிடைக்கின்றன.

Saturday, December 9, 2023

ஆந்திரிக் ஆடிகளார்

ஆந்திரிக் ஆடிகளார் 

இயேசுசபையைச் செர்ந்த புனித சவேரியாரின் உதவியாளராக இந்திய நிலப்பரப்புக்கு கிறித்துவ சமயம் பரப்ப வந்த ஆந்தரிக் ஆந்தரிக்கசு எனும் போர்த்துக்கேயர், 1546 இயேசுசபையினர் 'மதுரை சமையத் திட்டம்' என்ற ஒன்று வகுக்கப்பட்டதுக்கு ஏற்ப தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்.  கூடிய விரைவில் தமிழ் மொழியைக் கற்றிடவேண்டும் என்பது அவருக்கு புனித சவேரியார் இட்ட கட்டளை.  1548ல் புனித இலொயோலா இஞ்ஞாசிக்கு இவர் எழுதிய மடலில், தான் எவ்வாறு தமிழ் மொழியை விரைவாகக் கற்கிறேன் என மகிழ்ச்சிபோங்க விரிவாக குறிப்பிட்டுள்ளார்.  1578-86களில் தம்பிரான் வணக்கம், கிறித்தியானி வணக்கம், அடியார் வரலாறு, மலபார் இலக்கணம் மற்றும் தமிழ்-போர்துகேய அகராதி ஆகிய இரு 16-பக்க தமிழ் ஏடுகளை எழுதி கொல்லத்தில் அச்சிட்டு வெளியிட்டார். 




தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் அச்சிலேறிய முதல் ஏடுகள் இவையே.  இதற்கான தாள்கள் சீனத்திலிருந்து வரவழைக்கப்பட்டன.  அந்த காலகட்டத்தில் ஆவணங்களை எழுதுவதற்கு பனை ஓலையும் செப்புத்தகிடையும் கல்லையும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தனர். இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் மொழி வழக்கானது, இன்னும் முழுமையான தனி அடையாளம் பெறாத அன்றைய மலையாளமான, மலபார் தமிழ் என 'தம்பிரான் வணக்கத்தில்' குறிப்பிடப்பட்டுள்ளது.  

இவர்  தனது பிற்கால வாழ்க்கை முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்திலேயே சமயப் பணிக்காகச் செலவழித்துள்ளார்.  அப்பகுதியில் வாழ்ந்த மீனவ மக்களையும் முத்துக்குளிப்பவர்களையும் கிறித்துவ சமையத்துக்கு அறிமுகப்படுத்தியதற்கு இவருக்குப் பெரும்பங்கு உண்டு.  'ஆந்திரிக் ஆடிகளார்' என்ற பெயரில் கிறித்துவர்களிடத்தில் மட்டுமல்லாது பிற சமயத்தினரிடத்தும் பெருமதிப்பு பெற்றிருந்தார். தென் தமிழகத்தில் மட்டும் 58 ஆண்டுகள் வாழ்ந்துவந்த இவர், தனது 80ஆவது அகவையில் (1600ல்) புன்னைக்காயல் எனும் ஊரில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்தபோது, அப்பகுதியில் வாழ்ந்த அனைந்து சமயத்து மக்களும் காயல்பட்டினத்து இசுலாமியர்களும் துயரத்தில் கடைகளை அடைத்து இரு நாள்களாக உண்ணாநோன்பிருந்தனர் என 1601 ஆண்டுக்கான இயேசு சபை ஆண்டு மலர் தெரிவிக்கிறது.  அவரின் கல்லறையானது தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் உள்ளது.  

தமிழில் முதல் ஏடுகளை அச்சிட்டு வெளியிட்டதால் தமிழ் அச்சுத்துறையின் தந்தை என கருதப்படுதிறார்.  தமிழில் முதல் உரைநடைகளை எழுதியவர் எனவும் இவர் கருதப்படுகிறார்.


பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...