ஸ,ஷ,ஜ,ஹ,ஶ,க்ஷ,ஶ்ரீ ஆகிய வடவொலிதரும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாமா?
எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப.சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
இப்படித்தான் தன் முதல் செய்யுளிலேயே கூறுகிறது தொல்காப்பியம். அதாவது, தமிழ் எழுத்துகளானவை 'அ...ஔ' முதல் 'க...ன' வரை ஆகமொத்தம் முப்பது எழுத்துகளே. 'ஃ' எனும் அகேனத்தைக்கூட அலங்கடை என்கிறது.
மேலும், வட-எழுத்துகளாகிய கிரந்த எழுத்துகளை பயன்படுத்தக்கூடாது என்பதை,
வடசொற் கிளவி வடவெழுத்து 'ஒரீஇ' எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
என்ற செய்யுளின் வாயிலாக 'வடவெழுத்து ஒரீஇ' அதாவது 'கிரந்த எழுத்துகளை விலகுக' எனத் தொல்காப்பியம் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.
கிரந்த எழுத்துகளை தமிழில் முறைப்படுத்தி பயன்படுத்த தொடங்கிவிட்டால், இந்திய மொழிகளில் தமிழுக்கென்று மிச்சமிருக்கும் பிறமொழி கலவா தனித்தமிழ் கலைச்சொல்லாக்கம் என்பது அழிந்துவிட பெருமளவு வாய்ப்புண்டு. தமிழ் தவிர மற்ற இந்திய மொழிகளில் கலைச்சொற்கள் பெரும்பாலும் சங்கத மொழியிலேயே உருவாக்கப்படுகின்றன என்பதைக் காண்க.
வேற்றுமொழிச் சொற்களும் ஒலிகளும் அதற்கான (கிரந்தம் பொன்ற) எழுத்துகளும் 'கூடுமானவரை' தீண்டத்தகாத நச்சு வேதிப்பொருள் உணவு நிறமிகளாகக் கருதி (முறைப்படி தடைசெய்யப்பட்டு) தள்ளியே வைக்கப்பட்டு 'வேறுவழியேயில்லை' என்ற கட்டத்தில்மட்டும் (சட்டமீறுதல்களோடும், குற்ற உணர்ச்சியோடும்) சிறிது தொட்டுகொள்ளலாம். இந்த 'குற்ற உணர்ச்சியே' தனித்தமிழை நோக்கிய தேடலுக்கு வழிவகுக்கும்.
"தனித்தமிழ் வைத்து என்ன பயன்?; வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில் அப்படி என்ன குறைச்சல் ஏற்பட்டுவிடப்போகிறது? இதனை ஏற்கனவே செய்திடும் பிற இந்திய மொழிகள் அழிந்தா பொய்விட்டது?; 'ஆங்கிலத்தை'ப்போல் பலமொழிக் கூறுகளை தன்னுள் தயக்கமில்லாமல் ஏற்றுக்கொண்டால் தானே தமிழானது பன்மடங்கு வளம்பெறும்?; வாயால் எழுப்ப இயலக்கூடிய ஒலிகளை எழுதமுடியாத ஒரு வரிவடிவத்தை வைத்துக்கொண்டு என்ன பயன்? இவ்வகை எழுத்துகளின் சேர்ப்பால் தமிழிலிருந்து இன்னொரு 'மலையாளம்' பிரிந்து சென்றாலும் அதனால் தமிழுக்கு என்ன இழப்பு? " போன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் இங்கு உள்ளனர் என்று எனக்குத்தெரியும். :-) அதற்கு பதிலாக ஒரு ஆய்வுக்கட்டுரை நூலையே எழுதவேண்டிவரும் என்பது என் கணிப்பு.
பொதுவாக கிரந்த எழுத்துகள் பெயர்ச்சொற்களை எழுதுவதிலேயே பயன்படுவதைக் காணலாம். இவ்ழுத்துகளை தொல்காப்பியம் கூறும் முப்பது தமிழ் எழுத்துகளை மட்டும் வைத்தே எழுதிட முடியும் என்பது என் பட்டறிவு. அதை எப்படி எனப்பார்ப்போம்.
ஸ,ஶ
பெரும்பாலான தமிழர்கள் 'ஸ'வையும் 'ச'வையும் ஒன்றாகத்தான் ஒலிக்கின்றனர். (ச்ச - தவிர).
1} ஆகையால் 'ஸ' மற்றும் 'ஶ' ஆகிய எழுத்துகளுகக்குப்பதிலாக 'ச' தனை பயன்படுத்திவிடலாம்.
எ.கா:ஸர்ப்பம் >> சர்ப்பம்
2} 'ஸ்' அல்லது 'ஶ்' ஆகியவற்றிற்குப் பதிலாக 'சு' பயன்படுத்தலாம்.
எ.கா:ரோட்ரீகஸ் >> உரோட்ரீகசுரஸ்க் >> இரசுக்கு
3} 'ஸ்' அல்லது 'ஶ்' ஆகிய எழுத்துகளுக்குப் பிறகு 'ய'காரம் வந்தால் 'சி' இட்டு எழுதலாம்.
எ.கா:ஶ்யாமளா >> சியாமளாவஸ்யம் >> வசியம்
4} ஸ்' அல்லது 'ஶ்' ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் அவற்றை தவிர்த்துவிட்டு எழுதிப்பார்க்கலாம். ஒலிப்புக்கு ஒத்துவரவில்லை என்றால் 'சு' பயன்படுத்திவிடலாம்.
எ.கா:ஸ்தாணு >> தாணுஸ்தலம் >> தலம்ஸ்டாலின் >> தாலின்
5} ஸ்' அல்லது 'ஶ்' ஆகிய எழுத்துகளுக்குப் பிறகு 'ட'காரம் வந்தால் அதனை 'த்த' ஆக எழுதலாம்.
எ.கா:-அகஸ்டின் >> அகத்தின்
5} சில இடங்களில் 'ஸ' என்பதனை 'த'வாக எழுதும் பழக்கமும் தமிழில் உள்ளது.
எ.கா:-ராக்ஷஸன் >> இராட்சதன் / இராக்கதன்
ஹஸ்தம் >> அத்தம்
ஷ
1} இதற்கு 'ச' வைப் பயன்படுத்திவிடலாம்.
எ.கா:ஷாநவாஸ் >> சாநவாசுரோஷினி >> உரோசினி
2} ஆனால், 'ஷ' ஆனது இகரத்துக்குப் பிறகு வந்தால் 'ட' என எழுதிவிடலாம்.
எ.கா:ஜோதிஷம் >> சோதிடம்விஷம் >> விடம்விஷயம் >> விடயம், விசயம்ரிஷபம் >> இரிடபம், இரிசபம் >> இடபம்
பாஷாணம் >> பாடாணம்
3} அதுபோல 'ஷ்' என்ற எழுத்தை 'சு' அல்லது 'சி' என எழுதிவிடலாம்.
எ.கா:ரேஷ்மா >> இரேசுமா
ரஷ்யா >> உருசியா
சிஷ்யர் >> சிசியர் >> சீடர்
4} ஆனால், 'ஷ்க' என்பதை 'சுக்க' எனவும், 'ஷ்ச' என்பதை 'ச்ச' எனவும், 'ஷ்ட' என்பதை 'ட்ட' எனவும், 'ஷ்ப' என்பதை 'ட்ப' அல்லது 'சுப்ப' எனவும் எழுதிவிடலாம்.
எ.கா:
புஷ்கலா >> புசுக்கலா
குஷ்டம் >> குட்டம்
புஷ்பம் >> புட்பம், புசுப்பம்
5} 'ஷ' ஆனது முதல் எழுத்தாக வரவில்லை என்றால் 'ழ' என எழுதுவது இலங்கை வழக்கு.
எ.கா:விஷயம் >> விழயம் >> விழையம்ரிஷபம் >> இரிழபம்.
ஜ
1} இதற்கு பல இடங்களில் 'ச' தனையே பயன்படுத்திவிடலாம். ga, da, dha, ba வரும் இடக்களிலெல்லாம் க, ட, த, ப ஆகியவற்றை இப்போது பயன்படுத்துவதில்லையா!? அதுபோலத்தான் ஜ->ச வும்.
எ.கா:ஜகன் >> சகன்ஜான்ஸன் >> சான்சன்ராஜராஜன் >> இராசராசன்
2} அதுபோல 'ஜ்' என்ற எழுத்தை 'சு' என எழுதிவிடலாம்.
எ.கா:ஜ்வாலா >> சுவாலைராஜ்குமார் >> இராசுகுமார்
3} 'ஜ்'க்குப்பிறகு 'ய'காரம் வந்தால், அதனை 'சி' என எழுதிவிடலாம்.
எ.கா:பூஜ்யம் >> பூசியம்
4} சொல்லின் முதல் எழுத்தாக வராமலும் 'ஜ்' அல்லாத ஜகர எழுத்தாக வந்தால் அதனை 'ய'கரமாகவும் எழுதிடலாம்.
எ.கா:புஜங்கன் >> புயங்கன்.
ஹ
1} சொல்லின் முதலில் வந்தால் 'ஹ'வோடுவரும் உயிரொலியின் எழுத்தை பயன்படுத்திவிடலாம்.
எ.கா:ஹளபீடு >> அளபீடுஹொகேனக்கல் >> ஒகேனக்கல்ஹோசூர் >> ஓசூர்ஹைதராபாத் >> ஐதராபாதுஹரி >> அரி
2} சொல்லின் நடுவில்/இறுதியில வந்தால் 'க' போட்டுவிடலாம்.
எ.கா:
ரஹ்மான் >> இரகுமான்
ராஹுல் >> இராகுல்
ரஹஸ்யம் >> இரகசியம்
3} அதுபோல 'ஹ்' என்ற எழுது சொல்லின் முதலில் வந்தால் அதனை 'இ' என்றும், இடையில்/கடைசியில் வந்தால் 'கு' எனவும் எழுதிவிடலாம்.
எ.கா:ஹ்ருதயம் >> இருதயம் >> இதயம்.
க்ஷ
இது, 'க்'உம் 'ஷ'உம் சேர்ந்த கூட்டெழுத்து.
1} இதனை க்ச, ட்ட, ட்ச, க்க என ஒலியமைப்புக்கு ஏற்றவாறு எழுதிக்கொள்ளலாம்.
எ.கா:ரக்ஷகன் >> இரட்சகன்ராக்ஷஸன் >> இராட்சசன்தீக்ஷை >> தீக்கைருத்ராக்ஷம் >> உருத்திராக்கம்லக்ஷ்மி >> இலக்குமிலக்ஷ்மணன் >> இலக்குமணன் >> இலக்குவன்
2} சொல்லின் முதலில் வந்தால் 'ச' என எழுதிவிடலாம்.
எ.கா:க்ஷேத்திரம் >> சேத்திரம்க்ஷமை >> சமை.
ஶ்ரீ
இது 'ஶ்'யும் 'ரீ'யும் சேர்ந்த கிரந்தக் கூட்டெழுத்து.
1} பல காலமாகவே தமிழர்கள் இதனை 'சீ' என்றே எளிமையாக ஒலித்துவருகின்றனர்
எ.கா:ஶ்ரீநிவாசன் >> சீனிவாசன்ஶ்ரீதேவி >> சீதேவி
2} இதனை 'சிறீ' என வெகுகாலமாக இலங்கைத் தமிழர்கள் எழுதிவருகின்றனர்.
எ.கா:ஶ்ரீலங்கா >> சிறீலங்கா >> திருயிலங்கைதேவிஶ்ரீ >> தேவிசிறீ
3} இடங்களின் பெயரிலும் கடவுளர்களின் பெயரிலும் 'ஶ்ரீ' இருந்தால், அதனை 'திரு' என்றே எழுதிவிடலாம்.
எ.கா:ஶ்ரீரங்கம் >> திருவரங்கம்ஶ்ரீவைகுண்டம் >> திருவைகுண்டம்
F,Z
ஆங்கில மொழியில் காணப்படும் 'F' மற்றும் 'Z' ஆகிய ஒலிகளை முறையே 'ப' மற்றும் 'ச' ஆகிய எழுத்துகளால் எழுதிவிடலாம். சிலர் 'F'க்குப் பதிலாக 'ஃப'வையும் 'Z'க்குப் பதிலாக 'ஜ'வையும் பயன்படுத்துகின்றனர். இது தமிழ் இலக்கணத்தின் அடிப்படையின் படி முற்றிலும் தவறாகும். ஆக, 'F'க்கு 'ப'வையும் 'Z'க்கு 'ச'வையும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.
எ.கா:FeரோZ -> பெரோசுFaத்திமா -> பாத்திமாZiம்பாப்வே-> சிம்பாப்வே
இவை எவையும் சிலருக்கு உளநிறைவு ஏற்படுத்தாது. அவ்வாறான சிக்கலான பிறமொழிப் பெயர்களை, 'சீனர்'கள் செய்வதைப்போல, அப்பெயரின் பொருளை/ஒலியைத் தழுவிய நல்ல தமிழ்ப் பெயர்களை இட்டுக்கொள்ளலாம்.
எ.கா:
ராஜராஜன் >> மன்னர்மன்னன்
ஸ்தலம் >> இடம்
ஸர்ப்பம் >> பாம்பு
ஹளபீடு >> பழையவீடுஹொகேனக்கல் >> புகையுங்கல்
ஷூ >> காலணி
கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிக்கல் இல்லை என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஶ, க்ஷ ஆகிய எழுத்துகளையும் https://www.unicode.org/charts/PDF/U11300.pdf இதில் வரும் ga, da, dha, ba (𑌗, 𑌡, 𑌦, 𑌬) ஆகியவற்றிற்கான கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே பயன்படுத்துங்கள். வேண்டுமென்றால் kʰa, gʰa, chʰa, jʰa, tʰa, dʰa, thʰa, dhʰa, pʰa, bʰa (𑌖, 𑌘, 𑌛, 𑌝, 𑌠, 𑌢, 𑌥, 𑌧, 𑌫, 𑌭) இவற்றையும் தமிழ் எழுத்துகளுடன் பயன்படுத்திவிடுங்கள். பிறகு மிச்சம் என்ன இருக்கிறது.
குறிப்பு: இலக்கண நூலான நன்னூலானது தற்சமம் மற்றும் தற்பவம் பற்றி என்ன கூறுகிறது என்பதையும் படித்துவிடுங்கள்.
கிரந்த எழுத்துகளை தவிர்ப்பது பற்றி கவிஞர் தாமரை
இது பற்றி திரு வேதரத்தினம்
No comments:
Post a Comment